மகளை பற்றிய
மனதில் நின்ற தருணங்களை
எழுத எத்தனிக்கும்
போதெல்லாம்..
எனையறியாமல்
கலங்கி
விடுகிறேன் நான்.
தினமும்
கண் விழித்து
எனை கண்டவுடன்
கட்டிக்கொள்ளும்
நேரமெல்லாம்
இனிக்கிறது..
சேர்ந்து குளிக்கும்
நேரங்களில்,
அவள் என் தலையில்
தேய்க்கும் சோப்பு
நுரையாய் பொங்குகிறது,
அவளை பற்றிய
நினைவு என்னில்.
பிழையோடு அவள்
பேசும் வார்த்தையும்,
பாடும் பாட்டும்
அச்சில் ஏறா
கவிதையாய்,
அவளோடு
ஆடுகிறது
மனதில்.
சொல்லிக்கொடுக்காத
ஒன்றை அவள்
சொல்லும்போது
சுர்ரென உரைக்கிறது,
அவளின்
உலகத்திற்கான
கவனம்..
அவள் கொள்ளும்
சின்ன கோவமெல்லாம்
சொல்லி முடிக்க
எங்கு தேடியும்
கிடைக்கவில்லை
சொற்கள்.
என்னோடு அவள்
விளையாடும்
கண்ணாமூச்சியில்
மீண்டும் மீண்டும்
தொலைய துடிக்கிறேன்
நான்.
முத்தமிட்டு அவளை
உறங்க வைக்க..
என் கழுத்தை
கட்டிக்கொண்டு
"இன்னும் கொஞ்ச நேரம்
விளையாடுவோம்னு"
சொல்லும்போது..
விடியா இரவு வேண்டி
விழித்துக்கிடக்கிறது மனது..
இமைக்கும் நொடிகளுக்குள்
இரண்டு வருடங்கள்
கடந்து விட்டாள் இயல்..
இயலோடு இசை சேரும்
பேரனுபவத்திற்காக
மனம் கொள்ளா ஆவலுடன்
காத்திருக்கிறேன்
நீ பிறந்த இந்நாளில் நான்..