Friday, December 8, 2023

Happy anniversary

நீ நான் நீங்கி 

நாம் வாழும் 

இந்த இனிய 

இல்லறத்தில் 

சிட்டுக்குருவிகளாய் 

பறந்த  

இப்பத்தாண்டுகள் 

நம் நினைவுச் சேகரங்களில் 

நிச்சயம் ஒரு மைல் கல்..


இல்லறத்தில் இணை

மனிதனுக்கு முளைக்கும் 

மாயச்சிறகு..

வா..

மீதமுள்ள வானப்பெருவெளியை 

நம் வண்ணச்சிறகுகளால் 

மெல்லக் கடப்போம்..


இனிய திருமண நாள் 

வாழ்த்துக்கள்..



Monday, July 10, 2023

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரியா

அகம் அறிந்து 

பிடித்தவை தெரிந்து 

புதியவை புழங்கி 

புறம் பழகி 

பொறுப்புகள் புரிந்து 

தீயவை விளக்கி 

நல்லவை நாடி 

தன்னை தானே 

வடிவமைத்து 

வாழும் 

மனிதர்கள் 

எந்நாளும் 

அழகானவர்கள்..


உன்னை போல..


இனிய பிறந்த நாள் 

வாழ்த்துக்கள்..




Thursday, June 8, 2023

அன்புள்ள அப்பா..

அன்புள்ள அப்பா ,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

தொலைதூர வாழ்க்கை 

எல்லா வனப்புகளை 

தந்தாலும் 

உங்களை விட்டு 

விலகி வாழ்வது 

என்றும் 

வருத்தமே..


உங்களை 

சந்திப்பதற்கான 

ஆயத்தத்தில் 

நகர்கின்றன 

நாளும் 

பொழுதுகளும்..


இந்த ஆண்டு 

டிசம்பரில் 

உறுதியாக 

சந்திப்போம் 

என்ற தகவலோடு 

மீண்டும் 

இனிய 

பிறந்த நாள் 

வாழ்த்துக்கள்..


இப்பிறந்த நாளில் 

நான் வேண்டுவதெல்லாம் 

உங்கள்

பூரண 

உடல் நலமும் 

மனநலம் 

மட்டும்தான்..


என்றென்றும் 

மனம் கொள்ளா 

பிரியங்களுடன் 

உங்கள் 

மகன்..



Monday, June 5, 2023

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாழ்வெனும் அற்புதத்தில் 

அரை நூற்றாண்டு 

அனுபவம் சுவைத்து, 

கனத்த குரலுக்குள் 

இனிப்பு இதயத்தால், 

மனிதர்களை 

பேரன்பாலும்,

பேருதவிகளாலும் 

மீட்டுக்கொண்டு,

அகம் உணர்ந்து,

மனிதம் புரிந்து,

சுற்றம் தெளிந்து,

வாழும்

உங்கள் 

மட்டுமீறிய 

கூருணர்வு

உங்களோடு 

சேர்ந்து 

நிச்சயமாய் 

கொண்டாடப்பட 

வேண்டியது..


உங்களின் இந்த 

அகவை ஐம்பதில்..

எல்லா

வளமும்

நலமும்

சுற்றமென  

சூழட்டும்.. 

கொண்டாட்டம் 

உங்கள் அன்றாடம் 

ஆகட்டும்..


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அத்தான்..

என்றென்றும் பேரன்புடன் 

சேது 




Sunday, January 22, 2023

அடையாளமற்றவன்..

 நான் ஒரு அடையாளமற்றவன்.. 


என்னை  நான் 

அப்படி அறிமுகம் 

செய்யத்தான்  விரும்புகிறேன்..


இல்லை இல்லை..

அறிமுகம் என்பதே 

அடையாளப்படுத்துவதுதான்..


என் பெயர்.. 

நான் வைக்கவில்லை..


நான் படித்தது..

நான் மட்டும் படிக்கவில்லை..


நான் கற்றது, கேட்டது , உண்டது, கொண்டது, சேர்த்தது, 

என்னால் மட்டும் 

எல்லாம் நடக்கவில்லை 

எனக்கு..


எதற்க்காக 

பிறந்தேன்..

எதற்க்காக 

வாழ்கிறேன்..

நோக்கமும் ,  ஊக்கமும் 

நாளுக்கு நாள் 

மாறிக்கொண்டே 

இருக்கிறது..


பிறந்து, வாழ்வதற்கான 

நோக்கம் அறிவதில் 

இப்போதெல்லாம்..

ஆர்வமும் இல்லை 

எனக்கு..


தகுதி உள்ள 

உயிரினம் 

தப்பிப்பிழைக்கும் 

என்கிறார்கள்..


எது தகுதி..

எங்கிருந்து,

யார் முடிவு செய்கிறார்கள் 

அதை..

 

நான் எப்படி 

தப்பித்திருக்கிறேன் 

என்பதும் 

புரியவில்லை 

எனக்கு..


தப்பித்தல்..

எதனிடமிருந்து..

யாரிடமிருந்து..


தப்பித்தல் 

என்பது 

இளைப்பாற முடியாத 

தொடர் ஓட்டம்..


என் பாட்டன் ஆரம்பித்து 

அப்பா தொடர்ந்து

நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன்..


தலைமுறைக்கு, தலைமுறை 

நோக்கம் மாறுகிறது 

ஆனால் 

ஓட்டம் மாறவில்லை..


நான் மனிதர்களை 

போல வாழ 

விரும்பவில்லை..


ஒரு காட்டு 

மலரை போல..

ஒரு பாலை 

மரத்தை போல. 

யாருக்கும் தெரியாமல் 

மலர்ந்து ,

கிளர்ந்து 

மடிய 

விரும்புகிறேன்..


அடையாளம் தேடி திரியும் மனிதர்களின் 

எண்ணிக்கையில் 

என்னால் 

குறையட்டும்

ஒன்று..