Sunday, January 22, 2023

அடையாளமற்றவன்..

 நான் ஒரு அடையாளமற்றவன்.. 


என்னை  நான் 

அப்படி அறிமுகம் 

செய்யத்தான்  விரும்புகிறேன்..


இல்லை இல்லை..

அறிமுகம் என்பதே 

அடையாளப்படுத்துவதுதான்..


என் பெயர்.. 

நான் வைக்கவில்லை..


நான் படித்தது..

நான் மட்டும் படிக்கவில்லை..


நான் கற்றது, கேட்டது , உண்டது, கொண்டது, சேர்த்தது, 

என்னால் மட்டும் 

எல்லாம் நடக்கவில்லை 

எனக்கு..


எதற்க்காக 

பிறந்தேன்..

எதற்க்காக 

வாழ்கிறேன்..

நோக்கமும் ,  ஊக்கமும் 

நாளுக்கு நாள் 

மாறிக்கொண்டே 

இருக்கிறது..


பிறந்து, வாழ்வதற்கான 

நோக்கம் அறிவதில் 

இப்போதெல்லாம்..

ஆர்வமும் இல்லை 

எனக்கு..


தகுதி உள்ள 

உயிரினம் 

தப்பிப்பிழைக்கும் 

என்கிறார்கள்..


எது தகுதி..

எங்கிருந்து,

யார் முடிவு செய்கிறார்கள் 

அதை..

 

நான் எப்படி 

தப்பித்திருக்கிறேன் 

என்பதும் 

புரியவில்லை 

எனக்கு..


தப்பித்தல்..

எதனிடமிருந்து..

யாரிடமிருந்து..


தப்பித்தல் 

என்பது 

இளைப்பாற முடியாத 

தொடர் ஓட்டம்..


என் பாட்டன் ஆரம்பித்து 

அப்பா தொடர்ந்து

நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன்..


தலைமுறைக்கு, தலைமுறை 

நோக்கம் மாறுகிறது 

ஆனால் 

ஓட்டம் மாறவில்லை..


நான் மனிதர்களை 

போல வாழ 

விரும்பவில்லை..


ஒரு காட்டு 

மலரை போல..

ஒரு பாலை 

மரத்தை போல. 

யாருக்கும் தெரியாமல் 

மலர்ந்து ,

கிளர்ந்து 

மடிய 

விரும்புகிறேன்..


அடையாளம் தேடி திரியும் மனிதர்களின் 

எண்ணிக்கையில் 

என்னால் 

குறையட்டும்

ஒன்று..