கதறி அழுதுகொண்டிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு ராம் தன் தாத்தாவின் தலைமாட்டின் அருகே அமரும் போது மாலை ஆறு மணி இருக்கும். கூட்டம் முழுவதும் சென்னையிலிருந்து வந்திருங்கிய ராம் மீதே கவனம் கொண்டிருக்க ராமின் கவனம் மட்டும் தாத்தாவின் மீதே இருந்தது.
மரணப்படுக்கை பற்றியும் மரணம் பற்றியும் அவன் நினைத்து வைத்திருந்த அனைத்தும் எதார்த்தத்தில் வேறு ஒன்றாய் இருந்தது. மௌனமாய் தன் தாத்தாவின் கண்களை பார்த்துகொண்டிருக்க..
தம்பி.... தாத்தா இப்படி சாஞ்சிடாரே... நேத்துகூட தன் பேரனை பத்தி பேசினாரே... என்று அழுதுகொண்டே, பாட்டி அவன் அருகில் வர, சூழல் வேறு ஒன்றாய் மாறிக்கொண்டே இருந்தது..
ஒரு வார காலமாய் தாத்தாவிற்கு உடல் நிலை சரியில்லை என்பதும் , தீடீரென்ற அவர் உணவு,உரையாடல்களை நிறுத்தி கொண்டதையும் அங்கங்கே பேச்சுக்கள் உறுதி செய்துகொண்டிருந்தன.
பாட்டி தொடர்ந்து பேரனுக்கும், தாத்தாவுக்குமான உறவின் நெருக்கத்தை சொல்லிக்கொண்டே தன் மரண வாழ்த்து பாடலை பாடிக்கொண்டிருந்தாள்..
ஏன்யா... பாசமா வளத்த பேரனை பாக்கலையா...
தூக்கி வளர்த்த பேரன் இப்ப தூக்கி போக வந்திருக்கான்..
ஊட்டி வளர்த்த பேரன் இப்ப பாலுட்ட வந்திருக்கான்...
பாட்டியின் ஓலத்தை கேட்டுகொண்டுகொண்டே,
அவனின் உத்தரவுக்கு காத்திராமல் கண்கள் கண்ணீரை கொட்டிக்கொண்டிருக்க, நினைவுகள் தாத்தாவின் கைபிடித்து நடந்த நாட்களை நோக்கி நகர்த்திக்கொண்டு இருந்தது..
அதுவரை சலனமற்று இருந்த தாத்தாவின் கண்கள், உயிர்பெற்றதை அவனால் உணர முடிந்தது. அவன் தாத்தாவின் கண்களையே உற்று நோக்க அது கண்ணீரால் பேசிக்கொண்டிருந்தது..
மெல்ல மெல்ல தாத்தாவின் தளர்ந்த கைகள் உயிர்பெற்றுகொண்டிருக்க ராம் ஆச்சிரியத்தில் நெகிந்து கொண்டிருந்தான். திடீரென்று, முழுவதும் உயிர் பெற்றதாய் தாத்தாவின் வலது கை பேரனின் கண்ணீரை துடைக்க.. அழுதுகொண்டிருந்த கூட்டம் அப்படியே ஆச்சிரியத்தில் உறைந்து போயிருந்தது..
அழுகைகள் ஆச்சிரியமாய் போகும் நேரங்களும், கண்ணீர் மருந்தாகிப் போகும் மாயங்களும் உணர்வுகளின் ஒன்றுதலில் நடந்துகொண்டேதான் இருக்கும்...