Saturday, December 29, 2012

காதல் ஒரு ஆச்சரியம்!!!



முத்தங்களில் முழுவதுமாய் கரைந்து..  

உச்சி வருடையில் உயிர்  நீட்டிப்பிற்கான அர்த்தம் அறிந்து..

அங்க அசைவுகளில் ஆர்வத்தின் ஆழம் புரிந்து 

அழுகும் போதெல்லாம் அன்பின் முதிர்ச்சி முகர்ந்து..

இமை இசையில் இளைப்பாறி..

இதழ் மௌனங்களில்  கலவரமாகி..

எப்போதுமே கனவில் விழுந்து,

எப்போதாவது  காலிலும் விழும்

இந்த காதல் தான் எவ்வளவு ஆச்சிரியமானது !!!   

Saturday, December 15, 2012

கண்ணீர் மருந்து..


கதறி அழுதுகொண்டிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு ராம் தன் தாத்தாவின் தலைமாட்டின் அருகே அமரும் போது மாலை ஆறு மணி இருக்கும்.  கூட்டம் முழுவதும் சென்னையிலிருந்து வந்திருங்கிய ராம் மீதே கவனம் கொண்டிருக்க ராமின் கவனம் மட்டும் தாத்தாவின் மீதே இருந்தது.

மரணப்படுக்கை பற்றியும் மரணம் பற்றியும் அவன் நினைத்து வைத்திருந்த அனைத்தும் எதார்த்தத்தில் வேறு ஒன்றாய் இருந்தது. மௌனமாய் தன் தாத்தாவின் கண்களை பார்த்துகொண்டிருக்க..

தம்பி.... தாத்தா இப்படி சாஞ்சிடாரே... நேத்துகூட தன் பேரனை பத்தி பேசினாரே... என்று  அழுதுகொண்டே, பாட்டி அவன் அருகில் வர, சூழல் வேறு ஒன்றாய்  மாறிக்கொண்டே இருந்தது..

ஒரு வார காலமாய் தாத்தாவிற்கு உடல் நிலை சரியில்லை என்பதும் , தீடீரென்ற அவர் உணவு,உரையாடல்களை நிறுத்தி கொண்டதையும் அங்கங்கே   பேச்சுக்கள்  உறுதி செய்துகொண்டிருந்தன.

பாட்டி தொடர்ந்து பேரனுக்கும், தாத்தாவுக்குமான உறவின் நெருக்கத்தை சொல்லிக்கொண்டே தன் மரண வாழ்த்து பாடலை பாடிக்கொண்டிருந்தாள்..

ஏன்யா... பாசமா வளத்த பேரனை பாக்கலையா...

தூக்கி வளர்த்த பேரன் இப்ப தூக்கி போக வந்திருக்கான்..

ஊட்டி வளர்த்த பேரன் இப்ப பாலுட்ட வந்திருக்கான்...

பாட்டியின் ஓலத்தை கேட்டுகொண்டுகொண்டே,
அவனின் உத்தரவுக்கு காத்திராமல் கண்கள் கண்ணீரை கொட்டிக்கொண்டிருக்க,  நினைவுகள் தாத்தாவின் கைபிடித்து நடந்த நாட்களை நோக்கி நகர்த்திக்கொண்டு இருந்தது..

அதுவரை சலனமற்று இருந்த தாத்தாவின் கண்கள், உயிர்பெற்றதை அவனால் உணர முடிந்தது. அவன் தாத்தாவின் கண்களையே உற்று நோக்க அது கண்ணீரால் பேசிக்கொண்டிருந்தது..

மெல்ல மெல்ல தாத்தாவின் தளர்ந்த கைகள் உயிர்பெற்றுகொண்டிருக்க ராம் ஆச்சிரியத்தில் நெகிந்து கொண்டிருந்தான். திடீரென்று, முழுவதும் உயிர் பெற்றதாய்  தாத்தாவின் வலது கை பேரனின் கண்ணீரை துடைக்க..  அழுதுகொண்டிருந்த கூட்டம் அப்படியே ஆச்சிரியத்தில் உறைந்து போயிருந்தது..

அழுகைகள்  ஆச்சிரியமாய் போகும் நேரங்களும், கண்ணீர் மருந்தாகிப் போகும் மாயங்களும் உணர்வுகளின் ஒன்றுதலில் நடந்துகொண்டேதான் இருக்கும்...


Friday, December 7, 2012

டைரியின் பக்கங்கள்...


டைரி 11-04-2010  10 PM

இன்று என் வாழ்கையின் மிக அழகான நாள். காலை 6 மணிக்குதான் இந்த உலகம் என் தேவதையை தரிசித்தது.

மலரினும் மெல்லியவள்  என்னவள்,,
அவளினும் மெல்லியதாய் என் மகள்..
அவளை போலவே மெல்லியதாய் அவள் அழுகையும்..

டாக்டர்  என்  கையில் அவளை கொடுத்ததும், இதுவரை நான் கண்டிறாத என் கண்ணீர்தான் அவளுடனான முதல் ஸ்பரிசம்.. 

திருமணமான ஏழாவது வருடத்தில் இவள் எங்களுக்கு கிடைத்தது கூட என் கண்ணீருக்கு காரணமாக இருக்கலாம். பல நேரங்களில் காத்திருப்புக்கான காரணங்களை இயற்கை இப்படிதான் ஈடு செய்கிறது. 

நீண்ட நேரம் ரசித்துவிட்டு.. அவளுக்கான முதல் முத்தத்தை என் முரட்டு மீசையீன் வன்முறையோடு பதிவு செய்தேன். அவள் கை, கால்களை உதறி  என் முத்தம் ஏற்கப்பட்டதை உறுதி செய்தாள்.

சார்.. உங்க மனைவி கன்முளிசிட்டாங்க.. என்று நர்ஸ் சொன்னதும், இதுவரை ஏங்கி தவித்துகொண்டிருந்த தருணங்கள் என்னை அவள் அறை நோக்கி தள்ளியது. எங்களை எதிர்பார்த்திருந்தவலாய் என்னவள் புன்னகைக்க..  எங்கள் தேவதையை அவளிடம் காட்டினேன்.

அவளை வாங்கி மார்போடு அணைத்துக்கொண்டு, முழுவதுமாய் முத்தத்தில் நனைத்துவிட்டு.. கண்ணீர்  கலந்த கண்களோடு   என் கண்ணத்தில் முத்தமிட்டாள்..

மனைவி கணவனுக்கு  இரண்டாம் தாய்..

கணவன் மனைவிக்கு முதல் குழந்தை... 

எப்போதோ படித்த வாசகம்... மூளையில் இடம் வலமாக ஓடியது.... 

Tuesday, December 4, 2012

நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம்...

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் ராம் அந்த ஊருக்கு செல்வது இது இரண்டாவது முறை..

சுற்றிலும் வயல்வெளி அறுவடைக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டு இருந்தது. அம்மாவின் ஊராய் இருந்தாலும் கிராமம் அவனுக்கு அவ்வளவு பரிச்சமில்லை. தஞ்சாவூரிலிருந்து அந்த கிராமத்திற்கு மினி பஸ்ஸில்  ஏறியபோது முற்றிலும் வேறு உலகத்திற்கு பயணிப்பதாய் உணர்ந்தான்.

யாழினியை சந்திக்க போவதை நினைத்துக் கொள்ளும் போதெல்லாம், அவன் பார்க்கும் எல்லா முகங்களும் அழகாவே தெரிந்தது. அவளுக்கு வாங்கிய அழகிய மொபைல் போனை  பார்த்துக்கொண்டே பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது அங்கே யாழினி கல்லூரி பேருந்துக்காக நின்று கொண்டிருந்தாள்.

கல்லூரி பேரசிரியையாய் சேலையில் அவ்வளவு அழகு. சற்றே எதிர்பாராமல் ராமை சந்தித்ததில் மகிழ்ச்சியும் ஒரு வித படபப்பும் அவள் கண்களை உயிர்புள்ளதாய் மாற்றியது. இருவரின் பார்வை புன்னகையும் பரிமாறி கொண்டவுடன் ஆரம்பமானது அந்த அழகிய உரையாடல்.

அவள் : (ஆச்சிரியத்துடன்)  எங்கே இவ்ளோ தூரம் ?

அவன் : அம்மா குலசாமி சாமி கும்பிட்டு வரசொன்னாங்க. இங்க பாத்தா,, இறங்கியவுடன் தேவதை தரிசனம்...

அவள் : (சிறு புன்னகை பாய்ச்சிவிட்டு)  உண்மையை சொல்லுங்க...

அவன் : உண்மையில் யாழினி தரிசனத்திற்காக மட்டும் தான் வந்தேன்..

அவள் : (வெட்க புன்னகையுடன்) அதுதான் தரிசனம் கிடைச்சாச்சே.. கிளம்புங்க..

அவன் : அம்மனுக்கு ஆராதனை, அர்ச்சனை எல்லாம் வேண்டாமா ?
(மொபைல் போனை நீட்டி) வாழ்கையில் எப்போதாவது  காதல் வருமா  என்று நிறைய தடவ நெனச்சிருக்கேன்.  ஆனா அது எனக்கு நிச்சயிக்கப்பட்ட போன்னு கூடவே வரும்னு நினைக்கல..  ஐ லவ் யூ..

அவள் : (வெட்கப்பட்டு, சிரித்து, காதல் பார்வையோடு.. ) . தேங்க்ஸ்.. மொபைல் நல்லா இருக்கு.. ஆனா  நீங்க பேசுறத பாத்தா உங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கும் போல இருக்கே..

அவன் :அட நீ வேற.. நான் இவ்ளோ பேசுவேன் என்று இன்னைக்கு உன்னை பார்க்கிற வரைக்கும் தெரியாது..  சில நேரங்களில்  நம் உதடுகள் நம் இதயங்கள் பேசுவதை சொல்லிவிடும்..

அவள் :  ஒ.. உங்க இதயம் என்னை காதலிகிறேன்னு சொல்லுதா... அதுகிட்ட ஏன்னு கேட்டு சொல்லுங்க ?

அவன் :  அது  சொல்லுது..  உன்னை விட அழகியை  அது  இன்னும் உலகத்தில் பாக்கலையாம்..  அது மட்டும் இல்லாம, உன்ன பத்தி நினைக்கும் போதெல்லாம் "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" ப்ரோக்ராம்ல அது டான்ஸ் ஆடுற மாதிரியே இருக்காம்..

அவள் : (சிரித்துக்கொண்டே).. பரவாயில்லையே உங்க இதயம் பேச மட்டும் தான் செய்யும்னு நினைச்சேன்.. டான்ஸ் கூட ஆடுமா..?

அவன் :  டான்ஸ் மட்டுமா... பாட்டு கூட பாடும்.. இப்ப என்ன பாடுதுன்னு கேட்குதா? "சேலை கட்டி வந்த நிலவோ.. ஆடை கட்டி வந்த மலரோ.."

அவள் :  (ரசித்துகொண்டே)   உங்க இதயத்துக்கு பழைய பாட்டுதான் தெரியுமா?

அவன் : ஹே.. இது புதுசா ரிலீஸ் ஆகபோற ரீமிக்ஸ் பாட்டாம்..

அவள் : ஐயோ!! ஸாரி.. ஸாரி.. ரொம்ப நேரம் நின்னுன்னுகிட்டே  பேசிட்டிருகோம்.. வாங்க வீட்டுக்கு போவோம்.. ஹ்ம்ம்.. அப்பா கேட்டா நான் என்ன சொல்ல ? உண்மைய சொல்லுங்க.. எதுக்காக இந்த விசிட்?

அவன்: (சிரித்துகொண்டே) உண்மையில் உன்னை பார்கத்தான் வந்தேன்.. அப்பாவுக்காக நம்ம கல்யாண பத்திரிக்கை கொண்டு வந்திருக்கேன்..

இருவரும் கவிதையாய்  பேசிக்கொண்டே நடக்க... ரசித்துக்கொண்டே பின்தொடர்ந்தது காதல்...