Friday, December 8, 2017

வாழ்க்கைத்துணைநலம்..

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்..

வள்ளுவன் வடித்த வாழ்க்கைத்துணைநலம் என்னில்லறம்
என்பதின் மொத்தமாய்  நீ..

திருமண நாள் வாழ்த்துக்கள்..


உன்னோடு
உருவான
இல்லறம்
இப்போது
துணைநலம்
தாண்டி
மக்கட்பேறு
நோக்கி
நீள்வதின் 
மட்டற்ற
மகிழ்ச்சியில்
மீண்டும்
ஒருமுறை
மண நாள்
வாழ்த்துக்கள்..

Monday, September 4, 2017

விடுபட்ட சகோதரி..

கண்டம்
தாண்டி
சொந்தம்
தொலைத்து
வாழ்கிற
வெளியூர்
வாழ்க்கையில்..

இலையில்
இன்னுமொரு
பலகாரம்
எனக்கு மட்டும்
வைக்கிற
நண்பனின்
மனைவியில்
சகோதரியை
கண்டுவிடுகிறது
என் கண்கள்..

மன நோயாளியாகிய நாம்..

குறை சொல்லி
பழகிப்போன
தமிழ்ச்  சமூகத்தில்
குற்றம்
செய்தவனும்
குறை சொல்லும்
கொடுமையை
உணர்ந்த
தருணங்களில்
ஆரம்பித்திருக்கும்
நம் மனநோய்.

நினைவு தெரிந்த
ஒவ்வொரு
அரசியல் நிகழ்வும்
கோபங்களாகவும்
கண்ணீராகவும்
அச்சேறுவதற்க்கு
காரணம்
என்னவாக
இருக்கும்?

முழுவதுமாய்
விடுபட்டு வேறொரு
கண்டத்தில்
வாழ்கிற
நம் நண்பர்களை
விடாமல்
ஒரு சோகம்
துரத்துவதற்கு
வேறென்ன
காரணம்
இருக்க முடியும்?

சுய மரியாதை
இன்றி வாழ்வதே
இழிவு என்ற
சமூகத்தில்
சுய மரியாதை
துளியும்
இல்லாதவர்களை
ஆள அனுமதித்த
நம் மனநிலை
மனநோயன்றி
வேறென்ன?

தாய் நாட்டை
நினைக்கும்
போதெல்லாம்
பூரிக்க
வேண்டிய
ரத்தம்
பொங்கிக்
கொதித்துப்
புழுங்குவது
மனநோயன்றி
வேறென்ன?

இருப்பது
வாழ்வல்ல..
அறவழியை
வகுத்து இருத்தலே
வாழ்வென்ற
புறநானுற்று
தமிழனின்
தரந்தாழ்ந்த
தற்போதய நிலை
மனநோயன்றி
வேறென்ன?

மதிகெட்டுப்போன 
இந்த மனநோய் 
தொற்றுச் 
சமூகத்தில் 
அறச்சீற்றம் 
கொண்ட 
எவனும்..
எவளும்..
அனிதாவும்.. 
வாழ்வது 
ஆச்சரியமே.

வாருங்கள்..

சில வரிகள்  
எழுதிவிட்டு..

சில முறை 
பகிர்ந்து 
விட்டு 

கொண்டாடுவோம் 
நம் மனநோயை..





Sunday, July 9, 2017

பிறந்தநாளுக்கு

உன்
பிறந்தநாளுக்கு
மட்டும்
சிறகு விரிக்கும்
விசித்திரப் பறவை

என்
கவிதை..

நீ படிக்கும்
போதெல்லாம்
ரசிக்கும்..

நீ சிரிக்கும்
போதுதான்
அது பறக்கும்..


பிறந்தநாள்
வாழ்த்துக்கள்..
-சேது

உன்
பிறந்தநாளுக்கு
மட்டும்
சிறகு விரிக்கும்
விசித்திரப் பறவை
ஒன்றை வீட்டில் 
வளர்க்கிறேன்.

அந்த
ஒரு நாளில்
மட்டுமே 
உனக்கு இரவல்
தருவேன்..

நீ படிக்கும்
போதெல்லாம்
ரசிக்கும்..

நீ சிரிக்கும்
போதுதான்
அது பறக்கும்..

அதன் பெயர்..
கவிதை


பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
ப்ரியா..

அன்புடன்
சேது 

Sunday, May 28, 2017

மதுரை - மீனாட்சி - அழகர்

மதுரைக்குத் தெற்கே
மழை பெய்யாக் கானலிலே
தரிசாக் கிடக்குதுன்னு - மீனாள்
சம்பாவ விட்டெறிஞ்சா..

அள்ளி விதை பாவி -மீனாள்
அழகு மலை தீர்த்தம் வந்து
வாரி விதை பாவி -மீனாள்
வைகை நதித் தீர்த்தம் வந்து
சம்பா கதிரடித்து -சொக்கர்
தவித்து நிற்கும் வேளையிலே
சொர்ணக்கிளி போல -மீனாள்
சோறு கொண்டு போனாளாம்

நேரம் ஆச்சுதென்று -சொக்கர்
நெல்லெடுத்து எறிந்தாராம்.
அள்ளி எறிந்தாராம்
அளவற்ற கூந்தலிலே
மயங்கி விழுந்தாளாம் -மீனாள்
மல்லிகை பூ மெத்தையிலே
சோர்ந்து விழுந்தாளாம்
சொக்கட்டான் மெத்தையிலே..

அழுத குரல் கேட்டு
அழகர் எழுந்திருந்து
வரிசை கொடுத்தாராம்
வையகத்தில் உள்ளமட்டும்
சீரு கொடுத்தாராம்
சீமையிலே உள்ளமட்டும்
மானா மதுரை விட்டார்
மதுரையிலே பாதி விட்டார்.
தல்லா குளமும் விட்டார்
தங்கச்சி மீனாளுக்கு
தளிகையிலே பாதிவிட்டார்..

                           - பண்பாட்டு அசைவுகளில் இருந்து..
#மதுரை  #மீனாட்சி #அழகர் 

Tuesday, May 16, 2017

ஓநாய் குலச்சின்னம்..

டெஞ்சர் - மங்கோலிய மேய்ச்சல் நிலத்தின் கடவுள். இங்கு புல்லும் மேய்ச்சல் நிலமும் தான் பெரிய உயிர்கள். மங்கோலியர்களுக்கு புல்லை விட எதுவும் இரக்கத்திற்கு உரியதல்ல.

ஓநாய்கள் - மாயாஜால மிருகங்கள். மேய்ச்சல் நில காவலர்கள். குலச்சின்னம். உலகம் வென்ற ஜெங்கிஸ்கான் போர் கலைகளை ஓநாய்களுடமிருந்துதான் கற்றிருக்க கூடும்.

ஓநாய்களின் ஆளுமை வசியத்திற்கு ஆட்ப்பட்டு,  ஓநாய் குட்டியை வளர்ந்து, அதை அவனே கொன்ற  ஒரு சீனனின் கண்ணீர் களம்.

கதை முழுதும் ஆளுமை செய்கிற,  நம் கண் முன்னே வீரனாகவும், விவேகியாகவும் வந்து பதிகிற  ஓநாய்கள். குட்டியாய் கதையில் வந்து, நாய்களை போல் அடிமையாய் வாழாமல்,  சுதந்திரத்திக்காய் உயிரையும் விடுகிற ஓநாய்.

வேட்டை நாய்க்கள், மர்மோட்டுகள், முயல், எலி, குதிரை, ஆடு, அன்னம், காட்டு வாத்து  என ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லிப் காணாமல் போகும் சோகம்.

மேலே சொல்லப்பட்ட ஒவ்வொன்றையும், மெல்லமாக படுகொலை செய்த நவீனத்துவத்தின்  வன்முறை.. மனிதனே பிரதானமானவன் என்கிற மாவோவின் சிந்தனை..

கதை வழியே காட்சி படுத்த பழகிவிட்டால்,  ஓநாய் குலச்சின்னம்  நிச்சயம் ஒரு தவிர்க்க முடியாத வாசிப்பு அனுபவம்..





Tuesday, May 9, 2017

நினைவலைகள்-1

நினைவலைகள்..

அப்போ எனக்கு மூணு வயசிருக்கும்.. விடியகாலை நாலு மணிக்கு வாரிச்சுருட்டி அப்பாவும், அம்மாவும் எந்திரிக்க, ஏங்கூட சேந்து ஒன்றரை வயசு தங்கச்சியும் எழுந்துகிட்டா..

அப்ப நாங்க மொட்டை மாடி கூரை வீட்ல தங்கியிருந்தோம். கொட்டாய் விட்டுக்கிட்டே, கூரை வழியா வானத்தை பாக்குறேன், அது ஒரே கருப்பா மழ வரமாரி இருக்கு. அவசர அவசரமாய் ரெண்டு பெரும், ரெண்டு பெரிய்ய்ய்ய கொடத்தோட, நல்ல தண்ணி எடுக்க கெளம்பிட்டு இருந்தாங்க..

பிள்ளைகளை ஒத்தையில விட்டுட்டு போர பதட்டம் அம்மாவுக்கு கொஞ்சம் அதிகமாவே இருந்துச்சி..

அதுக்கப்புறம் இருபத்தஞ்சு வருஷம்..

அதே நாலு மணி..
வேற வேற இடம்..
வேற வேற தேவை..
ஆனா அதே உழைப்பு..

கடைசியா ரிலாக்ஸா நாலஞ்சு வருஷம் ஓடிக்கிட்டு இறுக்கப்ப..

திடீர்னு அதே உழைப்பு..  

நல்ல வேளை அய்யனாரு அம்புட்டையும் நிறுத்திட்டறாரு..

உழைத்தே பழகிய இருவரில்
இன்றும்
ஓய்வெடுக்க மனமில்லாமல்
ஒருவர்..
ஓய்வெடுக்க வழியில்லாமல்
இன்னொருவர்..

அப்பா = அம்மா  =  உழைப்பு

நூறு வருடம்
மன நிறைவோடும்,
மகிழ்ச்சியோடும்
நீங்கள் வாழ வேண்டும்
என்ற விருப்பத்தோடு
திருமண நாள் வாழ்த்துக்கள்..


Saturday, April 1, 2017

பீலிங் பிஸி..

தினம் ஒன்றை
பார்வேர்ட் செய்து
நானும் இருக்கிறேன்
என்றேன்.

எவர் பகிர்ந்ததையோ
நான் பகிர்ந்து
நானும் அவரும்
ஒன்று என்றேன்.

நான் சென்ற
இடங்களை எல்லாம்
TAG செய்து
நான் ஊர் சுற்றி
என்றேன்.

சாப்பிடுவதை
போட்டோ போட்டு
நான் புட் லவ்வர்
என்றேன்.

கட்சி
கருத்துக்களை
பகிர்ந்து
எனக்கும் அரசியல்
தெரியும் என்றேன்.

சினிமா
விமர்ச்சனம்
பகிர்ந்து
வேர்ல்ட் சினிமா
தெரியும் என்றேன்.

ரத்தம் தேவை
பகிர்வதவன் மூலம்
நான் இரக்கமானவன்
என்றேன்.

அனைத்தையும்
பொறுமையாய்
கவனித்த facebook
வாட்ஸ் ஆன் யுவர் மைண்ட்
என்றது ?

நான் பீலிங் பிஸி என்று
போஸ்ட் செய்தேன்..

Friday, March 31, 2017

வாட்ஸுப் மனிதர்கள்..

சிக்னலின் சிவப்பும் வாட்ஸுப் பச்சையும் ஒரே நேரத்தில் ஒளியை உமிழ, அனிச்சையாய்  கயலின் கால், கார் பிரேக்கையும், கை வாட்ஸுப்பையும் அழுத்தியது.

அபாயம் சுமந்து வரும் ஆம்புலன்ஸ் போல, வாட்ஸுப்,  ராஜனின் பதிவை அலாரம் அடித்து காண்பித்தது. கண நேரத்தில் கண்களை கடந்த செய்தி, மூளையால் சலவை செய்யப்பட்டு, கயல் இதயம் படபடத்தாள். சிக்னல் பச்சையை காட்டி சிரித்தது.

வாட்ஸுப்.
மனிதர்களுக்குதான் எத்தனை சுயதம்பட்டம். எத்தனை அவசரம். எத்தனை வன்மம்.  எத்தனை பதிவுகள் தன் இருப்பை நிறுத்த. எத்தனை பதிவுகள் பிறர் இருப்பை குலைக்க.

லிப்ட் பட்டனை அழுத்தும் போது, கோபங்கள் எல்லாம் வார்தைகளாகி வாட்ஸுப் பதிவு புறப்பட தயாராகி இருந்தது. லிப்ட் கதவுகள் மெதுவாய் மூடிக்கொண்டிருக்க திடீரென்று ஒரு கை உள்ளே நீண்டது.

"யாருடா இவன்" என்பது போல லிப்ட், தன் கதவை திறக்க, வாட்ஸுப்பில்   பதிவிட்டுக்கொண்டே உள்ளே வந்தான் சரவணன்.

இயந்திர மனிதர்களை சுமந்தே அலுப்பானதால், இம்முறை இறுக்கமாய் கதவுகளை மூடியது லிப்ட்.

Tuesday, February 14, 2017

காதலர் தின வாழ்த்துக்கள்


பொங்கி
பெருக்கெடுத்து.. 
உன் விழி 
வந்து சேர்கிற 
என்
ஒவ்வொரு 
வரிகளும்.. 

நீ 
புன்னகை 
பூக்கிற 
நொடிப்பொழுதில் 
கவிதையாகின்றன..

காதலர் தின வாழ்த்துக்கள் 

Wednesday, January 18, 2017

வழிகள் பிறக்கும்..

தமிழா தமிழா..
இனி நம்  கரங்கள்
உயர்ந்தால்
வழிகள் பிறக்கும்..

வழிகள் முழுதும்
தடைகள் இருக்கும்
அதை நம்
வலிமை உடைக்கும்.

இனியும் இனியும்
கரங்கள் இணையும்
அதில் நம்
விலங்குகள் உடையும்..

வடக்கும் அறியும்
வலிமை புரியும்
அதுவும்
நம்மிடம்  பணியும்

இளமை துடிக்கும்
இடர்கள்  இடிக்கும்
அரசியல் அதனுள்
வெடிக்கும்..

தமிழா தமிழா
இனி நம்  கரங்கள்
உயர்ந்தால்
வழிகள் பிறக்கும்..


Tuesday, January 17, 2017

தமிழன்டா..

இன்றைய தமிழ்
செய்திகளில்
அதிகம் பேசப்பட்ட
 வார்த்தைகள்..

தமிழன்
தமிழர் பண்பாடு
தமிழர் கலாச்சாரம்
சல்லிக்கட்டு..
போராட்டம்.

தமிழன்டா...

Monday, January 16, 2017

வாடி வாசல் - சல்லிக்கட்டு

தமிழகத்தில்
காளைகளை பாதுகாக்க
முதல் முறையாய்
சிங்கங்கள்
களமிறங்கியிருக்கின்றன..

வாடி வாசல் நிகழ்வு
தமிழக வரலாற்றில்
பெருமிதமாகவும்
வருத்தத்துடனும்
பதியப்படுகிறது..