உன் காதலை பெற..
எதாவது செய்யலாம் என்று நினைத்து..
ஏதேதோ செய்துபார்கிறேன்..
இப்போதுதான் தெரிகிறது..
உன்னை காதலிப்பதை தவிர
வேறொன்றும் செய்ய தெரியவில்லை
எனக்கு...
கூகிளில் சுட்ட கவிதையை கார்டில் எழுதி எடுத்துகொண்டு அப்பாச்சி பைக்கை காற்றில் விரட்டி, காபி டே அடைந்தபோது மாலை 6 மணி இருக்கும். அது தீர்மானிக்கப்பட்ட நேரத்தை விடவும் அரை மணித்துளிகள் முன்னதாகவே இருந்தது..
அவன் நினைத்தது போலவே இருவர் மட்டும் இருக்கும் இருக்கையை தேர்வு செய்து கொண்டான். மெனு கார்டை இரண்டு முறை படித்து தான் என்ன ஆர்டர் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டே அனிச்சை செயலாய் அவன் தலைமுடி கோதிக்கொண்டான்.
மூன்றாவது முறையாய் மணி பார்த்து, வாசலில் மெல்லியதாய் கண்களை ஓடவிட்டு, மீண்டும் மெனுகார்டில் கண்களை புதைத்தான். அவன் எதையுமே படிக்கவில்லை என்பதை மூளை பலமுறை சொல்லியும், கண்கள் கவனம்
கலைக்க மறுத்தது.
ஆண்களுக்கு அழகு அகம் என்பதை அறிந்து கொண்ட நாட்கள் தொட்டே அவன் பேச்சிலும், செயலிலும் கம்பீரம் இருப்பதை அவன் அறிவான். இருப்பினும் இதுவரை இல்லாத ஒரு அசௌகரியம் இருப்பதாய் உணர்ந்தான்.
சௌகரியம் அவன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த யமுனா என்ற அழகி வடிவில் பேரழகியாய் வந்து நின்றது..
பலமுறை பழக்கப்பட்ட பின்னரும், முழுவதுமாய் தரிசித்துவிட்டு அவள் முகம் பார்த்து சிரிக்கையில் அழகியின் பேச்சு ஆரம்பமானது...
எவ்ளோ
நேரமாச்சு ?
130 ( நாள் ) * 24( நேரம்) = 3120 (நேரம்) என்று அவளை பார்த்த முதல் நாள் முதல் இன்று வரையான நேரத்தை நகைச்சுவையாக சொல்லிக்கொண்டே அவன் கொண்டுவந்த கார்டை அவளிடம் நீட்டினான்..
அவள் உன்னில் ஆரம்பித்து எனக்கு என்று அவன் கவிதை வரிகளை முடிக்கையில் அவன் ஆயிரம் கவிதையை ரசித்தவனாக அவளின் அடுத்த வார்த்தைக்காக காத்திருந்தான்..
ஏன்
இவ்ளோ...........
நேரமாச்சு ?
என்று அவள் கேட்டுகொண்டே..
அவளுக்கான சம்மதத்தை அவள் பத்திரப்படுத்தி வைத்திருந்த அவன் முதல் கடிதத்தை பரிசளிப்பதன் மூலம் வெளிப்படுத்தினாள்...
பார்த்தவுடன் காதலில் நம்பிக்கை இல்லை..
எனவே என்னை உன் நண்பனாக மட்டும் அனுமதி..
படித்துக்கொண்டே... அவன் அவள் கண்களை எதிர்நோக்க...
வெட்கப்பட்டுக் கொண்டே கண்களை மூடியது.. காதல் !!!