Sunday, November 11, 2012

மீண்டும் ஒருமுறை..

நீண்ட இடைவெளிக்கு பிறகு அவனையே  பார்த்து  கொண்டிருந்த   ஆறு வயது சிறுமியின் பெயர் அறிந்ததில் அவ்வளவு ஆச்சிரியம் சக்திக்கு.
" ஐ யம் சக்தி அங்கிள்" என்று அவள் சொன்னவுடன் தன் பெயரும் அதுவே என்பதை ஆர்வமுடன் பதிவு செய்து  கொண்டான். ரயில் பயணங்களில் இது போன்ற அழகிகளுடனான உரையாடல்கள் சுவாரசியம் தரும் என்பதை அவன் அறிந்திருந்தான். அவள் கன்னக்குழி அழகு, மெலிதான அவன் கிள்ளலில் மேலும் அழகானது. அவனை கிள்ளிய அவளின் எதிர்வினை மீண்டும் அவளை அழகாக்கியது. பள்ளி நண்பர்களையும், ஓவியங்கள் வரைந்ததையும், நாய் குட்டி பற்றியும் அவள் விவரித்தது ஏதோ ஒன்றை அல்லது ஒருவரை நினைவுபடுத்துவதாகவே உணர்ந்தான்.

அப்பாவை பற்றிய அவனது கேள்விக்கான பதில் அவனை நிலைகுலைய செய்யவே,  அருகிருந்த அவளது  பாட்டியிடம்  கூடுதல் தகவல்களை பெற்று அவளின் நிலைமையும், தேவதையை தரிசிக்க  தவறிய  அரக்கன் அவள்  தந்தை என்பதை உறுதி செய்து கொண்டான். இப்போது அவன் கைகள் அரவணைப்பதாய் அவளின் தலை வருடியது. தொடர்ந்த, அவன் வார்த்தைகளில் இறுக்கமும், இரக்கமும் இருப்பதை உணர்ந்தான். திடீரென்ற அவளது மகிழ்ச்சியும், இதழின் மலர்ச்சியும் அவள் கண் பார்த்துக்கொண்டிருந்த திசை மீது இவனை திருப்பியது. "அம்மா" என்று அவள் தூரத்தில் கைகாட்டி அழுத்தமாய் கூறியது "கடவுள்கள் அம்மாவாக உலவுகிறார்கள்.." என்று இவன் படித்த பேஸ்புக் வாக்கியம் நினைவுக்கு வந்தது.

 நிழல் உருவம் அருகில் வரவர நிஜமும் அருகில் வந்து அமர்ந்தது. அது கார்த்திகா என்பதையும், மகளுக்கும் அவளை போலவே கன்னகுழி இருப்பதையும், அவள் முன்னாளில் அவன் காதலி என்பதையும் அதுவரை அவன் அறிந்திருக்கவில்லை. அவன் நினைவுகளில் அழகாய் இருந்த அவளின்  கன்னக்குழி, இப்போது பெரும் சோகங்களையும், இறுக்கங்களையும் கொண்டிருக்கும் புதை  குழியாகவே தோன்றியது. நீண்ட பார்வை பரிமாற்றத்திற்கு பிறகு, அவள் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் குட்டி அழகியை தூக்கிகொண்டு நடக்கவே, அவன் நினைவுகளும் முன்னோக்கி நடந்தன..

நினைவுகள் ஏழெட்டு வருடம் முன்னோக்கி நகர, இருவரும் உயர் கல்வியை ஒன்றாக பயின்று கொண்டிருக்கையில் பதிவானது  அந்த காதல். இருவருக்கும்  காதலை பற்றிய தெளிவு, சமூகம் பற்றிய தெளிவை விட அதிகமாக இருந்தது. இறுதியில் சமூக கட்டமைப்பின் குழப்பமும்,  குடும்ப அமைப்பின் பயமுறுத்தல்களும் அவளை அந்த முடிவை நோக்கி நகர்த்தியது. அவன், கடைசியாக அவள் சொன்ன வார்த்தைகளை நினைவுகூர முயன்ற போது, "அங்கிள்" என்ற அந்த குட்டி அழகியின் வார்த்தை, அவனை நிகழ காலம் நோக்கி திருப்பியது.

இத்தனை நாள் அவனின் காத்திருப்புகான முடிவையும், குடும்பம், சமூகம் வாழ்கை பற்றிய அவனுக்கான தெளிவையும், குட்டி அழகியின் கன்னங்களில் முத்தமிட்டு, மீண்டும்  "ஐ லவ் யூ" என்று சொல்லி நிறைவு செய்தான்.

No comments:

Post a Comment