அன்புள்ள அண்ணனுக்கு,
மணமான இந்நாளில் எனக்கு நண்பனாக , அன்பனாக, பாதுகாவலனாக,
சகோதரனாக என்னோடு நீ வாழ்ந்த எல்லா தருணங்களையும் பொக்கிஷமாக என்னுடன் எடுத்து செல்கிறேன்.
நீ உன் அன்பை வெளிப்படுத்த எனக்கு கொடுத்து கொண்டே இருகிறாய், எல்லாவற்றையும், எனக்கான கணவனையும். எனக்குள் நிறைந்து கிடப்பது நீ மட்டும் அல்ல, உன்னை பற்றிய உன் நினைவுகளும் தான்..
இன்னும் நினைவிருகிறது, என்னுடைய மூன்றாம் வயதில் அப்பாவும் அம்மாவும் வெளியில் சென்ற மழைத் தருணங்களில், இடிக்கு பயந்து நீ கதவுக்கு பின் ஒளிந்ததும், உனக்கு பின்னே நான் ஒளிந்து கொண்டதும்..
எல்லா உறவுகளும் காலத்தால் மாறும் என்ற உன் சித்தாந்த கருத்தை, இந்த சமுதாய சிறைக்குள் வளர்க்கப்பட்ட நான், என்ன சொல்லி இல்லை என்பது.
நீ என்னோடு முரண்பட்ட எல்லா தருணங்களும், அது என் பாதுகாப்பு பற்றிய உன் வருத்தங்கள் என்பதை நினைக்கும் போதெல்லாம் வலிக்கிறது.
நான் உன் வாழ்கையின் வழிமுட்டி நின்றவளாகவே நினைக்கிறேன், இந்நாளில் உனக்கு வழிவிட்டு போகிறேன் உனக்கான உன் வாழ்கையை வாழ.
அடுத்த ஜென்மம் ஒன்று இருப்பின் அதில் உன் மகளாக பிறக்க வேண்டும் என்ற என் ஆசையை பதிவு செய்து, இந்த ஜென்மத்தில் என் பிராத்தனைகளை மட்டுமே உனக்கு பரிசளித்து, பிரியா விடை பெறுகிறேன்.
உன் பிரியமுள்ள தங்கை..

No comments:
Post a Comment